1957 ஆம் ஆண்டு மலாயா சுதந்திரம் அடைந்தது. 1963 ஆம் ஆண்டு சிங்கப்பூர், வட போர்னியோவைச் சார்ந்த சரவாக், சபா பெருநிலங்களைக் கொண்டு மலேசியா எனும் புதிய நாடு உருவானது. மலாயாவில் 1950களில் 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. இப்போது 2011 ஆம் ஆண்டில் 523 தமிழ்ப்பள்ளிகள் தான் இருக்கின்றன. இந்தப் பள்ளிகளில் இன்னும் நான்கு பள்ளிகள் விரைவில் மூடப் படவிருக்கின்றன. இடைப்பட்ட 54 ஆண்டு காலத்தில் மலேசியாவில் இருந்த 365 தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன. ஏன் மூடப்பட்டன என்பதின் பொதுவான கருத்துகள்.
§ மலேசிய நாட்டின் நில மேம்பாட்டுத் திட்டங்கள்.
§ மலேசியத் தமிழர்கள் தமிழ் மொழியை மறந்து வருகின்றனர்.
§ தமிழர்கள் நகர்ப்புறங்களுக்கு குடி பெயர்ப்பு.
§ அரசாங்கம் போதுமான ஆதரவு வழங்கவில்லை.
2010 ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி மலேசிய இந்தியர்களில் 84 விழுக்காட்டினர் நகர்ப்புறம் அல்லது புறநகர்ப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
வரலாறு
மலேசியாவில் வாழும் தமிழர்கள் 1800-1900 ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியினரால் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப் பட்டனர். அவர்கள் ஒப்பந்தக் கூலிகளாக உடலுழைப்பு வேலைகளில் அமர்த்தப் பட்டனர். ரப்பர் தோட்டங்களில் வேலை செய்தனர். காடு மேடுகளை வெட்டி சாலைகளை அமைத்தனர். மேடு பள்ளங்களைக் கட்டி ரப்பர் கன்றுகளை நட்டனர்.[2]
அவ்வாறு மலேசியாவிற்கு வந்த தமிழர்கள் அவர்கள் தங்கி இருந்த இடங்களில் கோயில்களை அமைத்தனர். அவர்களுடைய பிள்ளைகளுக்கு கல்வி அவசியம் என்பதை உணர்ந்தனர். முதலில் சிறிய கல்விக் குடில்களை அமைத்தனர். மலேசியாவில் முதல் தமிழ் வகுப்பு 1816 ஆம் ஆண்டு Penang Free School பள்ளியில் தொடங்கப்பட்டது. அப்போது அப்பள்ளியின் தலைவராக இருந்த ஆர்.ஹட்சின்ஸ் என்பவர் தொடக்கி வைத்தார்.
1900-ஆம் ஆண்டுகளின் இறுதியில் நாட்டின் விவசாயம் மற்றும் தோட்டப்புற மேம்பாட்டின் காரணமாக தென் இந்தியர்களின் வருகை கூடியது. அதனால் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையும் கூடியது.
புதிய தொழிலாளர் சட்டம் 1912
பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே சிறிய கல்விக் குடில்களாக இருந்தவை பின்னர் பள்ளிக்கூடங்களாக மாறின. 1940 - 1950ஆம் ஆண்டுகளில் தோட்டத்திற்குத் தோட்டம் ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடம் வந்தது. சிறு நகரங்களில் வாழ்ந்த தமிழர்களும் தமிழ்ப் பள்ளிக்கூடங்களை உருவாக்கிக் கொண்டனர்.
1912- ஆம் ஆண்டு புதிய தொழிலாளர் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஒரு தோட்டத்தில் குறைந்தது 10 தமிழ்க் குழந்தைகள் பள்ளி செல்லும் வயதில் இருந்தால் அங்கு ஒரு பள்ளி கண்டிப்பாகக் கட்டப்பட வேண்டும் என்பது தான் அந்தத் தொழில் சட்டம்.[4] பெரும்பாலும் அவ்வாறு கட்டப்பட்ட பள்ளிகள் தோட்ட நிர்வாகத்தினரின் கீழ் செயல்பட்டு வந்தன. பல தோட்ட மேலாளர்களின் மெத்தனப் போக்கினால் தமிழ்ப்பள்ளிகளின் நிலைமை தடுமாறியது.
தமிழ்ப்பள்ளிகளுக்கு முறையான ஒரு பயிற்றுத் தன்மை இல்லாதது ஓர் அடிப்படைக் காரணம். அல்லது வேர்த் தனம் இல்லாத குறைபாடு என்றும் சொல்லலாம். அதன் பின்னர் வந்த மலாயா கல்விச் சட்டம் தமிழ்ப்பள்ளிகள் தோன்றுவதற்கு முழுமையான அடையாளங்களைத் தோற்றுவித்தது. ஆக, தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு சாதகமானச் சூழல்நிலை ஏற்பட்டது. இந்த மாற்றங்கள் நடந்தது 1930 - 1937 ஆண்டுகளில்.
அடிப்படை உரிமைகள் இழப்பு
மலாயாவில் வேலை இருக்கிறது என்று இந்த நாட்டிற்கு வந்த இந்தியர்களின் நிலைமை மிகவும் வேதனையானது. அவர்கள் சரியாக நடத்தப்படவில்லை அவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை இழந்த மாதிரியான ஒரு நிலைமையும் ஏற்பட்டது. அமெரிக்க அடிமைகளைப் போல நடத்தப் பட்டனர்.
1950களில் மலாயா வாழ் இந்தியர்களின் அடிப்படை உரிமைகள் மிகுந்த பாதிப்பு நிலை அடைந்தன. இந்தக் கட்டத்தில் இந்திய அரசாங்கம் தலையிட்டது. மலாயா வாழ் இந்தியர்களுக்காகக் குரல் கொடுத்தது.
மலாயா வாழ் இந்தியர்கள் என்பதில் தமிழர்கள் பெரும்பான்மையினராக இருந்தனர். அதன் விளைவாக தமிழ்ப் பள்ளிகளிக்கு அதிக மானியம் வழங்கப்பட்டது. தமிழ் ஆசிரியர்களுக்குச் சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டது.
ரசாக் அறிக்கை
1956 ஆம் ஆண்டு "ரசாக் அறிக்கை"[5] ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதற்கு முன்னர் தமிழ்ப் பள்ளிகள் தனியார் நிர்வாகத்தின் கீழ் இருந்து வந்தன. 1957 ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தின் வழி சிறுபான்மை இனத்தவரின் பள்ளிகள் " தேசிய மாதிரி " எனும் அடைமொழியோடு புதிய வடிவம் கண்டன.
சிறுபான்மை இனத்தவரின் பள்ளிகள் என்பதில் தமிழ்ப்பள்ளிகளும், சீனப்பள்ளிகளும் அடங்கும். 1950களில் மலேசியாவில் 900 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன என்பது ஓர் அதிசயமான செய்தி. ஆனால் இப்பொழுது 2011 ஆம ஆண்டில் அந்தத் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை 523 இருக்கிறது என்பது ஒரு மகா வேதனையான செய்தி.
ஒரு காலக் கட்டத்தில் மலேசிய இந்தியர்கள் தோட்டப் புறங்களையே நம்பி வாழ்ந்தார்கள். அப்போது அவர்களிடம் கல்வியறிவு குறைவாக இருந்தது. அதனால் அவர்களுடைய எசமானர்களை அவர்களால் எதிர்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழர்களை அடிமைகளாகப் பிரித்தானியர்கள் கருதினர்.
ஆனால், அடுத்து அடுத்து வந்த தலைமுறையினர் நகர்ப்புறத்தை நாடினர். படிப்பறிவைப் பெற்றனர். தோட்டப்புற மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தும் போனது. நூற்றுக்கணக்கான தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன.
கூட்டுத் தமிழ்ப்பள்ளி
மேலும் சில தோட்டங்களில் இருந்த தமிழ்ப்பள்ளிகளில் குறைவான எண்ணிக்கை கொண்ட மாணவர்களே இருந்தனர். அதைச் சரி படுத்த கூட்டுத் தமிழ்ப்பள்ளிகள் உருவாக்கப் பட்டன்.
மூன்று நான்கு தமிழ்ப்பள்ளிகளைக் கூட்டாக இணைத்து ஒரு மையப் பள்ளியை அமைப்பது தான் ஒரு கூட்டுத் தமிழ்ப்பள்ளி ஆகும். இப்படியும் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்தது. இந்த மாதிரியான கூட்டுத் தமிழ்ப்பள்ளிகள் 1979 - 1980 -ஆம ஆண்டுகளில் மிகவும் பிரபலம் அடைந்தன.
கீழே வரும் புள்ளி விவரங்கள் மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் எப்படி சன்னம் சன்னமாகக் குறைந்து வந்தன என்பதைக் காட்டும். மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் 1957 ஆம் ஆண்டில் 888ல் இருந்து 2006 ஆம் ஆண்டுக்குள் 523 ஆகக் குறைக்கப் பட்டன. ஒரே ஓர் 50 ஆண்டுகளில் 365 தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன. அந்தக் கட்டத்தில் மலேசிய இந்தியர்களுக்கு உதவிகள் செய்தவர் அமரர் துன் சம்பந்தன். தமிழகத் தூய்மைச் செம்மல் காமராசரைப் போன்றவர்.
ஐந்தாம் தலைமுறை இந்தியர்கள்
துன் சம்பந்தன் மறைவு மலேசியர்களுக்கு மட்டும் அல்ல உலகத் தமிழர்களுக்கே மாபெரும் இழப்பு. 2006 ஆம் ஆண்டில் இருந்து மலேசியாவில் உள்ள தமிழர்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. இதுவரையில் ஒரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படவில்லை. மலேசியாவின் ஐந்தாம் தலைமுறையினரிடம் ஒரு புது மாறுதல்கள் தோன்றி வருகின்றன. மலேசியாவில் எந்த ஒரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாமல் இருக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்று வருகின்றனர்.
ஒரு தமிழ்ப்பள்ளி மூடும் கட்டாயம் வந்தால் முதலில் அந்தப் பள்ளியின் கல்வி அனுமதிச் சான்றிதழ் அரசாங்கத்திடம் இருந்து பெறப் படுகிறது. வேறு ஓர் இடத்தில் அல்லது மாநிலத்தில் நிலம் வாங்கப்படுகிறது. அரசாங்கப் பணத்தை இவர்கள் எதிர்பார்க்கவில்லை. பல இலட்சம் ரிஙகிட் செலவு செய்து நிலத்தை வாங்கிய பின்னர் பள்ளிக்கூடம் கட்டப் படுகிறது.
No comments:
Post a Comment